அனைவரையும் மயங்க வைப்பது இசை. இசைக்கு அசையாத உயிர்களே இல்லை எனலாம். இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்றார் கவிஞர் கண்ணதாசன். இராமாயண மஹா காவியத்தில் இராவணனைப் பற்றிக் கூறுவது யாதெனில் இராவணன் ஒரு முறை தன் புஜ பலத்தில் கர்வம் கொண்டு சிவபெருமானும் பார்வதி தேவியும் குடியிருக்கும் திருக்கைலாய மலையேயே தூக்க முற்பட்டானாம். அப்போது சிவபெருமான் தன் கட்டை விரலால் அழுத்தவே இராவணனது பத்து சிரங்களும் மலைக் குன்றுகளுக்கிடையே மாட்டிக் கொண்டு அவதிப் பட்டானாம். பின்னர் அவன் சிவபெருமானைக் குறித்து சாம வேதம் பாடவே சிவபெருமான் அவனது இசையால் மயங்கி அவன் மேல் கருணை கொண்டு காலின் அழுத்தத்தை நீக்கவே இராவணன் விடுதலை பெற்றான்.
இப்படி இறைவனையே மயங்க வைக்கும் இசைக்கு மனிதர்கள் அனைவரும் மயங்குவதை நாமறிவோம், அதிலும் குழந்தைகளுக்கு இசை மிகவும் பிரியமான ஒன்று. குழந்தை தாயின் தாலாட்டு எனும் இசையைக் கேட்டு உறங்குகிறது.
சரஸ்வதி சபதம் என்ற திரைப்படத்தில் வித்யாபதி எனும் புலவராக நடிக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் செல்வாம்பிகை எனும் அரசியாக நடிக்கும் கே.ஆர். விஜயாவுக்கும் நடக்கும் சம்பாஷணை இசையின் மகத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.
செல்வாம்பிகை எனும் அரசி வேடத்தில் வரும் கே.ஆர். விஜயா, "இசை பாடும் புலவரல்லவா? உங்களது பேச்சிலே நல்ல அசைவு இருக்கிறது" எனக் கூற, வித்யாபதி எனும் புலவராக நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், "இசை இல்லையென்றால் உலகில் அசைவே கிடையாது தேவி, பிறப்பிலிருந்து இறப்பு வரை மனித வாழ்வோடு பின்னிக் கிடப்பது இசை. குழந்தை பிறந்தவுடன் தொட்டிலிலே இட்டு ஆட்டும் பொழுது தாலாட்டு என்ற இசை, எழுந்து உட்கார்ந்த பிறகு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு எனும் இசை, நடக்கும் போது கைவீசம்மா கைவீசு என்ற இசை, பால் சோறூட்டும் போது நிலாவைக் காட்டி, நிலா நிலா ஓடிவா என்ற இசை, பருவமடைந்த பிறகு கும்மி, கோலாட்டம் என்ற இசை, மணவறையிலே அமர்ந்த பிறகு நலுங்கு என்ற இசை, இந்தப் பாழும் பிறவி செத்த பிறகு சுற்றிலும் அமர்ந்து அழுவது ஒப்பாரி என்ன்ற இசை, சர்வமும் இசை" என்பார்.
இத்துனை மகத்துவம் வாய்ந்த இசைக்கு ஒரு தளம் அமைத்து யாம் பெற்ற "இன்பம் பெருக இவ்வையகம்" எனும் முதுமொழிக்கிணங்க உலகெங்கிலுமுள்ள பல்வேறு இணைய ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் எனும் எம் நெடுநாளைய அவா தமிழிசை.காம் மூலம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனின் அருளையும் இணைய வாசகர்களிண் ஆதரவையும் வேண்டுகிறோம்.
அன்புடன்
ஆகிரா
ஆகிரா